ஞாயிறு, 4 அக்டோபர், 2015

** கனவு உலா..**

*
அழகான பாரீஸ் நகர,
வீதிகளில், 
பேரழகான பெண்ணோடு,
ஆண்மை துளிர்க்க,
காதல் உலா....

நிறைவேறா கனவுகளில்,
சஞ்சரிக்கிறேன்,
என் பின்னிரவுகளின்,
ஆழ்ந்த உறக்கத்தில்..

**
இந்த கனவுகளில்,
நான்,
மிக உயர்ந்த சிம்மாசனத்தில்,
பேராற்றலோடு,
வீற்றிருக்கிறேன்...
என்னருகே,
பெரும் ராஜ்யத்தின்,
பேரழகான ராணி..

**
பல பல நூற்றாண்டுகளுக்கு,
முன்,
வெண் புரவி ஒன்றின்,
மீதேறி,
மங்கோலியா நாட்டில்,
புழுதி பறக்க,
விரைந்து கொண்டிருக்கிறேன்..
நான்,
செங்கிஸ்கானின்,
போர் படை தளபதி..

**
மாசிடோனியாவில்,
இரவு விருந்தில்,
நானும்,
உலகை வென்ற மாவீரன்,
அலெக்ஷாண்டரும்,
உற்சாகமாய் பேசி,
கொண்டிருந்தோம்..
நிலவும் ,
விண்மீன்களும்,
ஆர்பரித்தன..

**
பால்ய வயதில்,
பேரன்பை பேசி,
மறைந்த,
அற்றை நாட்களின்,
பெரியவரோடு,
அளவளாவி கொண்டிருந்தேன்,
எதுவென்று இனம் காண,
முடியா ஒரு தேசத்தில்..
**
தீரா வேதனையில்,
உறக்கமின்றி,
தவித்த என்னை,
அணைத்து,
அறிவுரை கூறி,
அமைதியாய் உறங்க வைத்தார்,
காமராஜர்..
நான் ஆழ்ந்து,
உறங்கி போனேன்..