சனி, 26 ஜூலை, 2014

* வலியுணர் காதல். *

அவளுக்கு என்னை,
மிக பிடித்திருக்கிறது,
என்பதை உணர்ந்தேன்...

எனக்கும்,
அவளை தொடர்தல்,
பிடித்திருந்தது..

இற்றை நாள் போலல்ல,
அற்றை நாட்கள்.

பேச தயக்கம்..
பொதுவாகவே,
மௌனம்தான் காதல்,
வளர்க்கும்,
அற்றை நாட்களில்..

ஒரு பேருந்து பயணத்தில்,
என்னை, அவள்,
கவனித்ததை உணர்ந்து,
மெய்சிலிர்த்த வினாடிகள்,
இன்னமும்,
என் நினைவுகளில் பசுமையாய்..

வானம் வசப்பட்டதை,
போன்றொரு உணர்வில்,
மிதந்தேன்..

காதல் ஒரு அழகிய,
உணர்வு என்பதை,
உணர்ந்தேன்..

இருப்பினும்,
பேசுவதற்கு பெரும்,
தயக்கம்..

தயக்கம் தொடர,
நாட்களும் தொடர,
காதலும் மெல்ல,
தொலைந்தது போன்றொரு,
பிரமை..

சூழல் நெருக்கடிகளில்,
சிக்கி,
உழைப்பை மூலதனமாய்,
வைத்து,
பொருள் தேடி,
பயணப்பட்டு, சில காலம்,
கழித்து ஆவலாய்,
வீடு திரும்பினேன்..

மேஜையில்,
என்னை பார்த்து,
படபடத்து சிரித்தது,
அவளின் திருமண,
பத்திரிக்கை..

அந்த வினாடிகளில்,
உடலின் அதிர்வுகள்,
இன்னமும் எனக்குள்,
நினைவுகளாய் இருக்கிறது..

காரணம் எதுவோ,
அவளை திருமணத்தில்,
வீழ்த்தி இருந்தது..

சற்றே காலம்,
காதலை மறக்கடித்த,
வேளையில்,
யாரோ ஒரு பெண்ணுடன்,
எனக்கு திருமணம்..

பிடித்திருக்கிறதோ இல்லையோ,
எனக்கே தெரியவில்லை..
ஏதோ வாழ்க்கை பயணத்தில்,
இன்று நான்..

சில கால இடைவெளிக்கு,
பின்,
ஒரு நாள்,
நான் பயணித்த பேருந்தில்,
அவள் முன் இருக்கையில்..

ஒரு பேருந்து நிறுத்தத்தில்,
அவள்,
மௌனமாய் இறங்கி,
சென்றாள்..

நான் மௌனமாய்,
சலனமற்று இருந்தேன்..

காதல்,
நினைவுகளை மட்டுமே,
பரிசாய் விட்டு செல்லும்..

அந்த பரிசு,
வலி மிக்கது.. .

இளமையில்,
காதல் இல்லாதிருத்தல்
சிறப்பு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக